மண்ணில் பிறக்கும் ஒவ்வொருவரும் தங்களின் பிறப்பிற்கான அர்த்தத்தை
நிலைநாட்டிவிட்டு செல்லவேண்டும் என்பார்கள். தனது பிறப்பையும், செயலையும்
அர்த்தமுள்ளதாக மாற்றியவர்தான் பெருந்தலைவர் காமராஜர். இந்தியாவின் கிங்மேக்கராக
திகழ்ந்து இரண்டு பிரதம மந்திரிகளை உருவாக்கியவர் படிக்காத மேதை காமராஜர். அவரது
பிறந்தநாளில் அவரைப் பற்றி சில தகவல்களை தெரிந்து கொள்வோம்.
காமராசர்(காமராஜர்)தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர்களுள் ஒருவர் ஆவார்.
1954 ஆம் ஆண்டு அப்போதைய சென்னை மாநில முதலமைச்சர் ஆனார். இவர்
ஒன்பது ஆண்டுகள்தமிழகத்தின் முதல்வராகப் பதவி வகித்தார். தமிழகத்தில் பள்ளிக்
குழந்தைகளுக்கு இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். காமராசர் எளிமைக்கும்
நேர்மைக்கும் பெயர் பெற்றவர். இவரை, தென்னாட்டு
காந்தி, படிக்காத மேதை, அரசரை உருவாக்குபவர், பெருந்தலைவர் என்றெல்லாம் புகழ்வர். இவர் "கருப்பு
காந்தி" என்றும் அன்போடு அழைக்கப்படுகிறார். இவர் இறந்த பிறகு, 1976 இல் இந்திய அரசு இவருக்குப் பாரத ரத்னா விருது வழங்கியது.
மதுரைப் பல்கலைக்கழகத்திற்கு, மதுரை காமராசர் பல்கலைக்கழகம் என்றும்,சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையத்தின் உள்நாட்டு முனையத்திற்கு காமராசர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் விருதுநகரிலே ஒரு வியாபாரக் குடும்பத்திலே
பிறந்தவர் ஆவார். அந்தக் காலத்தில் அந்த ஊருக்குப் பெயர் விருதுப்பட்டி.
காமராஜர் தாயார் பெயர் சிவகாமி அம்மாள். தந்தையின் பெயர் குமாரசாமி
நாடார். அவர் விருதுப்பட்டியிலே தேங்காய் மொத்த வியாபாரம் செய்து வந்தார். சிவகாமி
அம்மாளுக்கு இரண்டு சகோதரர்கள். ஒருவர் கருப்பையா நாடார். – இவர் துணிக்கடை வைத்திருந்தார்.
மற்றொருவர் பெயர் காசிநாராயண நாடார். இவர் திருவனந்தபுரத்திலே மரக்கடை வைத்து நடத்தி
வந்தார்.
1903- ஆம் வருடம், ஜுலை மாதம் 15-ஆம் தேதி, காமராஜர் பிறந்தார். அவருக்கு
குல தெய்வமான காமாட்சியம்மாளின் பெயரையே முதலில் சூட்டினார்கள்.
கண்ணனைப் பாரதி ”கண்ணம்மா” ஆக்கி அழைத்துப் பாடிப் பரவசப்பட்டதுபோல்
ஆணாகப் பிறந்த காமராஜரை ”காமாட்சி” ஆக்கி அனைவரும் அழைத்து மகிழ்ந்தார்கள்.
தாயார் சிவகாமி அம்மாள் மட்டும், தன் செல்லக் குழைந்தையை ”ராஜா” என்றே
அழைத்து வந்தாள். நாளடைவில் காமாட்சி என்ற பெயர் மாறி, ‘காமராஜ்’ என்று ஆனது.
காமராஜருக்குப் பின்னர், சிவகாமி அம்மாள் ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.நாகம்மாள்
என்று அந்தக்குழந்தைக்குப் பெயர் சூட்டினார்கள். காமராஜரும் தங்கையிடம், அன்பும் பாசமும்
கொண்டிருந்தார்.
காமராஜர் தனது பள்ளிப் படிப்புக்காலங்களிலேயே, இளம் வயதிலேயே, விருதுப்பட்டியில்
நடந்த பொதுக்கூட்டங்களுக்குப் போகலானார். ஆங்கிலேயர்கள் இந்தியாவை அடிமைப்படுத்தி ஆண்டு
கொண்டிருந்த காலம் அது. காமராஜர் இளம் வயதில் கேட்ட பொதுக் கூட்டங்களே அவரைப் பிற்காலத்தில்
சுதந்திரப் போராட்ட வீரராகக் மாற்றியது.
”தந்தையொடு கல்விபோம்” – என்பதற்கு ஒப்ப, காமராஜரின் தந்தை குமாரசாமி
நாடாரின் மறைவிற்குப் பின் காமராஜரின் பள்ளிப்படிப்பு முற்றுப்பெற்றது. வியாபாரங்களில்
ஈடுபட்டார். முதலில் துணிக்கடையிலும், பின்னர் திருவனந்தபுரத்தில் மரக்கடை வைத்து நடத்திய
காசியாராயண நாடார் மரக்கடையிலும் சிறிது காலம் வியாபாரத்தில் ஈடுபட்டார். அவரது கவனமெல்லாம்
தேச விடுதலையிலேயே இருந்தது. வைக்கம் போராட்டத்தில் கலந்து கொண்டார். உப்புச் சத்தியாகிரகத்தில்
பங்கு பெற்றார்.
காலப்போக்கில் காமராஜர், சத்தியமூர்த்தி தொண்டனாகி, காங்கிரஸ் பேரியக்க
உறுப்பினராகி முழு நேரத் தேசப்பணிக்குத் தன்னை அர்ப்பணித்துக்கொண்டார். விடுதலைப் போரில்
தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.
கள்ளுக்கடை மறியல், அந்நியத் துணிகள் பகிஷ்காரம், கொடிப் போராட்டம்,
உப்பு சத்தியாக்கிரகம், சைமன் கமிஷன் எதிர்ப்பு ஆகியவற்றில் காமராஜர் பங்கேற்றுச் சிறை
தண்டனை பெற்றார்.. அடுத்தடுத்துப் போராட்டங்கள் அனைத்திலும் ஈடுபட்டு பலமுறை சிறை தண்டனைகளை
அனுபவித்தார் காமராஜர்..
தமிழ்நாடு காங்கிரஸில், ”காமராஜர் காங்கிரஸ்” என்ற நிலை உருவாகியது.
காமராஜர் தனது தியாகத்தாலும், சலியாத உழைப்பாலும், தொண்டுகளினாலும் உயர்ந்த நிலையை
அடைந்தார்.
1952-ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காமராஜர் சாத்தூர் தொகுதியில்
நின்று வெற்றி பெற்றார். சுமார் பன்னிரண்டு ஆண்டுகாலம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின்
தலைவராக இருந்து தமிழ்நாட்டிலே காங்கிரஸ் பேரியக்கத்திற்குப் பெரும் செல்வாக்கை ஏற்படுத்தித்
தந்தார்.
1954- ஆம் ஆண்டு காமராஜர் தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் ஆனார். தலைவர்
பதவியைத் துறந்தார். நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் துறந்தார். குடியாத்தம் தொகுதியில்
சட்டசபைக்குத் தேர்தலில் நின்று வெற்றி பெற்றார். மேல்சபை உறுப்பினராகி அவர் முதல்
அமைச்சர் பதவியை வகித்திருக்கலாம். குறுக்கு வழியில் உள்ளே புகுந்து கொள்ள என்றும்
விரும்பாத பெருந்தலைவரே கு. காமராஜர்.
இங்கே நான் காமராஜர் தமிழ்நாட்டின் முதல் அமைச்சராகிச் செய்த சாதனைகளையே
பட்டியலிட்டு காட்ட முன் வந்திருக்கிறேன். அதிகம் படிக்காத பெருந்தலைவர் காமராஜர் கல்விக்குச்
செய்த சாதனைகள் எண்ணிலடங்காதவைகளாகும். ஏழை, எளியவர், உயர்ந்தவர், தாழ்ந்தோர், ஆக எல்லோருக்கும்
கல்வி-இலவசக் கல்வி – பட்டி, தொட்டிகளில் எல்லாம் பள்ளிக்கூடங்கள் – இலவச மதிய உணவுச்
சீருடைகள், இப்படிப் பலதிட்டங்களைத் தீட்டி அமுல்படுத்தினார் காமராஜர். தமிழகத்தில்
கல்விச் செல்வம் பெருகியது. கிராமங்கள் தோறும் ஓராசியர் பள்ளிகள் திறக்கப்பட்டன.
கல்விக் கேள்விகளில் மட்டும் சிறந்து விளங்கினால் போதுமா? நாட்டிலே
பஞ்சம், பசி, வேலையில்லாத் திண்டாட்டங்கள் விலகி விடுமா? சிந்தித்தார் காமராஜர். திட்டங்கள்
தீட்டினார். நாட்டிலே புதுப் புதுத் தொழிற்சாலைகளை நிறுவச்செய்தார். தொழிற்கல்விக்கு
முக்கியத்துவம் கொடுத்தார்.
காமராஜரின் திட்டங்களால் தமிழ்நாடு முன்னணியில் நின்றது. காமராஜரின்
கல்வித் திட்டங்கள் நிறைவேற உடனிருந்து பாடுபட்டவர் அந்நாள் பள்ளிக் கல்வி இயக்குனர்
திரு.நெ.து. சுந்தரவடிவேலு ஆவார்.
அதேபோல், காமராஜரின் தொழிற்திட்டங்கள் நிறைவேறக் காரணகர்த்தாவாக இருந்தவர்
அன்றைய தொழில் அமைச்சர் திரு. ஆர். வெங்கட்ராமன் ஆவார்.
1957 – ஆம் ஆண்டு பொதுத் தேர்தலிலும் தமிழ்நாட்டில் காங்கிரஸ் அமோக
வெற்றிப்பெற்றது. பெருந்தலைவர் காமராஜரே மீண்டும் தமிழ்நாட்டின் முதலமைச்சரானார்.
ஒன்பது ஆண்டுகாலம் தமழக முதலமைச்சராக இருந்த பெருந்தலைவர் காமராஜர்,
தான் கொண்டு வந்த கே. பிளான் மூலம் தானே முதலமைச்சர் பதவியைத் துறந்தார். அகில இந்திய
காங்கிஸ் தலைவரானார்.
பெருந்தலைவர் காமராஜர் ஆண்ட காலத்தைத் தமிழ்நாட்டின் பொற்காலம் என்பார்கள்.
அந்தக் காலத்தை உங்கள் பார்வைக்கும், படிப்புக்கும் கொண்டு வருவதற்காகவே இந்நூல் வெளியிடப்படுகிறது.
”காமராஜரின் சாதனைகள்” என்னும் இந்த நூலினைக் காமராஜர் நூற்றாண்டு விழா,
ஆண்டிலே வெளியிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கதும், பெருமைக்கு உரியதுமாகும்.
பெருந்தலைவர் காமராஜர் சாதனைகளைப் பிள்ளைகள் மட்டுமின்றிப் பெரியவர்களும்
படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதே என்னுடைய ஆசை.
முதலமைச்சராகக் காமராஜர் தமிழகத்தில் ஒன்பது ஆண்டுகாலம் நல்லாட்சி புரிந்தார்.
கல்விக்கும், தொழிலுக்கும்,காங்கிரஸ் கட்சிக்கும் அவர் செய்த சாதனைகள் கணக்கில் அடங்காதவைகளாகும்.
விருதுநகரிலே ஒரு சாதாரணக்
குடும்பத்தில் பிறந்து, போதிய கல்வி கற்கவும் வசதியற்ற சூழ்நிலையிலே வளர்ந்து, வாழ்ந்து,
பின்னர் அரசியலிலே தொண்டராக ஒரு மாபெரும் கட்சியிலே இணைந்து, தனது உழைப்பால், தொண்டால்
படிப்படியாக உயர்ந்தவர் தான் பெருந்தலைவர் காமராஜர். அவரது சாதனைகள் யாவுமே
சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தவைகள்.
கல்விச் சாதனைகள்:
கல்வி என்பது, உயர் குடிப் பிறந்தோர்கள் மற்றும் பணக்காரர்கள்
வீட்டுப் பிள்ளைகளுக்கு மட்டும்தான் என்ற நிலைமை மாறிற்று. கல்வி கற்பது
எளிதாக்கப்பட்டது. ஏழை, எளியவர்களுக்கும் கல்வி. இலவசக் கலவி என்றானது.
எங்கும் கல்விக் கூடங்கள் திறக்கப்பட்டன. எல்லோருக்கும்
இலவசக்கல்வி. மதிய உணவு – சீருடைகள் – என்றெல்லாம் திட்டங்கள் போட்டுச் செயல்படுத்தினார்
முதலமைச்சர் காமராஜர். கல்வி நிலை உயர்ந்தது. எட்டாக்கனியாக இருந்த கல்வி, ஏழை,
எளியவர்களுக்கும் எட்டியது. இதனால் ”கல்விக் கண் திறந்தவர்” என்று காமராஜரைப்
பல்லோரும் பாராட்டினார்கள்.
”ஏட்டையும்-பெண்கள்-படிப்பது-தீதென்று
எண்ணியிருந்தவர்-மாய்ந்து-விட்டார்.
வீட்டிற்குள்ளே-பெண்ணைப்
பூட்டிவைப்போமென்ற
விந்தை மனிதர் தலைகுவிந்தார்”
எண்ணியிருந்தவர்-மாய்ந்து-விட்டார்.
வீட்டிற்குள்ளே-பெண்ணைப்
பூட்டிவைப்போமென்ற
விந்தை மனிதர் தலைகுவிந்தார்”
— என்றார் மகாகவி பாரதி. அந்த நிலையை தமிழகத்திலே உண்டாக்கிக்
காட்டியவர் பெருந்தலைவர் காமராஜரே ஆவார்.
பெண்கல்வி பெருகியது. கிராமங்களில் கூடப் பெண் பிள்ளைகள் கல்வி
கற்க முற்பட்டார்கள். கையெழுத்துப் போடு என்று காட்டினால், இடது கைக் கட்டை விரலை
நீட்டுகிறவர்கள் தான் அந்தக் காலத்தில் ஆண்களிலும், பெண்களிலும் அதிகமாக
இருந்தார்கள். இந்த நிலை மாற இளைய தலைமுறையினர் காமராஜர் ஆட்சியால் கல்வி நலம்
பெற்றார்கள்.
சீருடைத் திட்டத்தினால் பள்ளிகளில் ஏழை, பணக்காரன் பிள்ளைகள்
என்கிற பாகுபாடுகள் நீங்கின. மாணவர்களிடையே ஒற்றுமை உணர்வுகள் மேலோங்கின.இந்த
மாற்றம் சமுதாயத்தில் காமராஜர் நிகழ்த்திக்காட்டிய பெரிய மாற்றமல்லவா?
இதைப் போலவேதான் இலவச மதிய உணவுத் திட்டமும் – பள்ளிக்குப்
படிக்கச் செல்லும் குழந்தைகள் கட்டுச்சோற்று மூட்டைகளையும், புத்தக மூட்டைகளோடு
சுமந்து சென்று கொண்டு இருந்த நிலைமை மாறிற்று. இதனால் மிகவும் பின் தங்கிய
சமுதாயத்தினர்களும், ஏழை, எளியவர்களும் கூடத் தங்களது பிள்ளைகளைப் பள்ளிகளுக்குத்
தயங்காது அனுப்பி வைத்தார்கள். ”வீட்டில் இருந்தால்தான் பசி, பட்டினி – பிள்ளை
பள்ளிக்கூடம் சென்றாலாவது நாலு எழுத்துக் கற்றுக்கொள்ளும் – மதியமும் வயிறாரச்
சாப்பிட்டுக்கொள்ளும்” என்று நினைத்துத் தங்களது பிள்ளைகளைத் தயங்காது
பள்ளிகளுக்கு அனுப்பி வைத்தார்கள்.
எங்கும் தமிழகத்தில் பள்ளிக்கூடங்கள் எல்லோருக்கும் இலவசக்கல்வி –
இலவச்ச் சீருடைகள். இலவச மதிய உணவுகள் – தமிழ்நாட்டில் கல்வி நிலை உயர்ந்தது.
காலங் காலமாக கல்வி கற்ற்றியாதவர்கள் எல்லாம் கல்வி கற்றார்கள். காமராஜரின்
திட்டங்களினால் கல்வி பெருகியது நாட்டில்.
எல்லாக் கிராமங்களிலும் ஆரம்பப் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன.
ஆனால் ஆயிரக்காணக்கான,இலட்சக்கணக்கான இந்தப் பள்ளிகளுக்கு ஆசிரியர்களை நியமிக்க
வேண்டுமே. அத்தனை பள்ளிகளுக்கும், ஆசிரியர் பயிற்சி பெற்ற ஆசிரியர்களுக்கு எங்கே
போவது? இந்தக் கேள்வி எழுந்தது.
இதற்கும் ஒரு வழியைக் காமராஜரே கண்டுபிடித்துச் சொன்னார். அது
என்ன?
”நாட்டிலே படித்துவிட்டு வேலை கிடைக்காமல், ஆயிரக்கணக்கான பேர்கள்
இருக்கிறார்கள். அவர்களை எல்லாம், ஓராசிரியர் பள்ளிகளுக்கு ஆசிரியர்களாக நியமித்து
விடலாமே. ‘அ’ – ‘ஆ’ ன்னா ‘அம்மா, அப்பா – படம், பட்டம், மரம், மாடு’ ன்னு கற்றுத்
தரப் பயிற்சி ஆசிரியர்தானா தேவை?” என்றார் காமராஜர்.
அன்றைய பள்ளிக்கல்வி இயக்குனராக இருந்த திரு நெ.து. சுந்தர வடிவேலு
இந்தத் திட்டத்தை ஏற்றுக்கொண்டார். எங்கும் ஓராசிரியர்கள் பள்ளிகளுக்கு வேலைக்கு
அமர்த்தப்பட்டார்கள். பின்னர் அவரகளுக்கு இரண்டு மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர்
அரசு செலவிலேயே ஆசிரியர் பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
இந்த திட்டத்தினால், எத்தனையோ படித்த வேலையற்றவர்களுக்கு வேலை
வாய்ப்புக்கள் கிடைத்தன. அந்தக் கால ஆரம்பப்பள்ளிப் பாடத்திட்டத்தில்,
”அணில் – ஆடு, இலை, ஈக்கள், உரல், ஊஞ்சல், எலி, ஏணி, ஐவர்,
ஒட்டகம்,ஓணான், ஔவையார், எஃகு என்றுதான் தொடக்கக் கல்விப பாடங்கள் இருந்தன. ‘ப – ட
– ம்’ படம் என்றும், ‘ம -ர – ம்’ மரம் என்றும் எழுத்துக் கூட்டிப் படிப்பதும்
இருந்தன.
இவைகளை எல்லாம் ஓராசிரியர்களாக நியமிக்கப்பட்டவர்கள் ஒழுங்காக
பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுத்தார்கள்.
பிள்ளைகள் படிக்க வழிகண்டாயிற்று. பெரியவர்கள, முதியவர்கள் படிக்க
வழிகள் ஏதும் இல்லையா? – என்று கேட்கலாம்.
எல்லாக் கிராமங்களிலும் இரவுப் பாடசாலைகள் தொடங்கப்பட்டன. முதியோர்
கல்வி கற்கலானார்கள். எழுத்துக்கள் – எண்கள்- எழுதப் படிக்கக் கற்றுக்கொண்டார்கள்.
கல்வி நிலை உயர்வடைந்தது காமராஜர் ஆட்சியில். உண்மைதானே?
ஆரம்பப் பள்ளிப் படிப்போடு சந்தர்ப்பம் சூழ்நிலைகளால் மேலே படிக்க
முடியாமற்போன, காமராஜர்தான் ‘தான் கற்றுத் தேராவிட்டாலும், தமிழ்நாட்டிலே இருந்த
கோடானுகோடிப் பேர்கள் கல்வி கற்று வாழ்விலும் முன்னேற எல்லா வகையிலும்
பாடுபட்டார். திட்டங்கள் தீட்டினார் – செயல்படுத்தினார்.
காமராஜரைப் படிக்காத மேதை என்பார்கள். உண்மையில் அவர் படிக்காத
மேதை அல்ல. படித்த மேதை. தனது படிப்பு அறிவை அவர் காலப்போக்கில் வளர்த்துக்
கொண்டார். ‘கற்றலிற் கேட்டலே நன்றே’ என்பார்கள். காமராஜருக்குக் கிடைத்த கேள்வி
ஞானம் அளப்பற்கரியது. செய்தித்தாள்களைப் படிப்பதின் மூலம் நாட்டு நடப்புகளை, உலக
நிலையை அன்றாடம் அவர் உணர்ந்து கொண்டிருந்தார்.
பாரதியார் பாடல்கள் மற்றும் பற்பல ஆங்கிலப் புத்தகங்களை எல்லாம்
கூட அவர் அன்றாடம் படித்தார். நாளாக, நாளாக அவர் கற்ற்றிந்த மேதையர்களோடு,
உடனிருந்து உரையாடும் ஆற்றலினையும் பெற்றார். ‘கல்வி சிறந்த தமிழ்நாடு’ – என்று
ஆக்க அவரது ஆட்சியை அவர் பயன்படுத்திக் கொண்டார் என்றே கூறலாம்.
”கண்ணுடையோர்-என்பர்-கற்றோர்-முகத்திரண்டு
புண்ணுடையோர் கல்லாதவர்” – என்று
புண்ணுடையோர் கல்லாதவர்” – என்று
இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பே திருவள்ளுவர் கூறியிருக்கிறார்.
காமராஜர் காலத்தில் தமிழகத்தில் கண்ணுடையோர்களைவிட, முகத்திரண்டு
புண்ணுடையோர்களே பெரும்பாலானவர்களாக இருந்தார்கள். காரணம் பொதுமக்களுக்குக்
கல்வியின் மேல் நாட்டம் இல்லாமை என்பது இல்லை.
நாட்டில் நிலவிய வறுமை, பஞ்சம், பசி, வேலையில்லாத் திண்டாட்டங்கள்
தான் காரணம் என்பதைக் காமராஜர் உணர்ந்திருந்தார்.
அன்றைய இந்தியாவில் மேற்கு வங்காளமும், கேராளவும்தான் கல்வியில்
மிகமிகப் பின் தங்கியே இருந்து வந்தது.
”கல்வி சிறந்த தமிழ்நாடு” என்று பாடிய பாரதியின் வாக்கை
மெய்ப்படுத்திக் காட்டியவர் பெருந்தலைவர் காமராஜரே ஆவார்.
காமராஜர் முதலமைச்சராக இருந்த கால கட்டத்தில், கல்விக்காக அவர்
என்னென்ன சாதனைகள் செய்தார் என்பதை இனிக் காண்போம்.
காமராஜர் ஆட்சிக்கால்த்தில்தான் எல்லாச் சிற்றூர்களிலும்
தொடக்கப்பள்ளிகள் தொடங்கப்பட்டன. பேரூர்களுக்கு எல்லாம் உயர்நிலைப்பள்ளிகள்
ஏற்படுத்தப்பட்டன. நாட்டுப்புறம் என்று ஒதுக்கப்பட்ட கிராமங்களில் கூட உயர்நிலைப்
பள்ளிகள் உருவாகின.
16 ஆயிரம் தொடக்கப் பள்ளிகளில் 16 லட்சம் குழந்தைகள்
படிக்கலானார்கள். அதன் பின்னர் தொடக்கப் பள்ளிகளின் எண்ணிக்கை 30 ஆயிரத்தைத்
தாண்டியது. ஏறத்தாழ 48 லட்சம் பிள்ளைகள் தமிழகத்தில் கல்வி கற்கலானார்கள்.
30 ஆயிரம் தொடக்கப்பள்ளிகளில் 16 லட்சம் மாணவ – மாணவிகள் பகல் உணவு
உண்டார்கள் என்று அன்றைய பள்ளிக் கல்வி இயக்குனராக இருந்த திரு. நெ.து. சுந்தர
வடிவேலு கூறுகிறார்.
காமராஜர் முதலமைச்சராகப் பதவி ஏற்ற போது 3 இலட்சத்து 86
ஆயிரமாகயிருந்த உயர்நிலைப்பள்ளிகள், அவரது முயற்சிகளால் 13 லட்சமாக உயர்ந்தது.
தொழிற் கல்விக் கூடங்களும் மாவட்டம் தோறும் தொடங்கப்பட்டன. தொழில்கள் பெருக
வேண்டுமானால் தொழிற் கல்வியும் அத்தியாவசியமன்றோ.
இலவசக் கல்வி, மதிய உணவு, இலவசப் பாடப்புத்தகங்கள் என்றெல்லாம்
அறிமுகப்படுத்திய காமராஜர், தனது ஆட்சிக் காலத்திலே தான் பள்ளிப் பிள்ளைகளிடையே
சீருடையை அணிந்து எல்லாக் குழந்தைகளும் சமம் என்பதை நிரூபித்துக் காட்டினார்.
பள்ளிகளில் அந்தக் காலத்தில் பணக்கார்கள் வீட்டுப் பிள்ளைகள்
ஆடம்பரமான உடைகளில் வந்தார்கள். ஏழை, எளிய பிள்ளைகள் கிழிசல் சட்டைகளைப் போட்டுக்
கொண்டு பள்ளிக்கூடம் வந்தார்கள். பள்ளியில் படிக்கும் பிள்ளைகளைப்பார்த்தால், யார்
யார் பணக்காரர்கள் வீட்டுப்பிள்ளைகள், யார் யார் ஏழைகள் வீட்டுப் பிள்ளைகள் என்று
எளிதில் அடையாளம் தெரிந்து கொள்ளலாம்.
இந்த வேறுபாட்டை, வித்தியாசத்தை பூண்டோடு களைந்து எறியவே காமராஜர்
பள்ளிப் பிள்ளைகளுக்குச் சீருடைத் திட்டத்தைக் கொண்டு வந்தார். அந்தத் திட்டத்தைத்
தமிழகம் முழுதும் அமுல் படுத்தினார். இந்தத் திட்டத்தினால் பள்ளியில் படிக்கும்
பிள்ளைகளிடம் ஏழை, பணக்காரர் என்ற வித்தியாசங்கள் இல்லாமல் போய்விட்டன. அந்தச்
சீருடைத்திட்டம் இன்னும் தமிழகத்தில் எல்லாப் பள்ளிகளிலும் இருக்கக் காணலாம்.
இன்று கூட எத்தனையோ, டாக்டர்கள், வழிக்கறிஞர்கள், என்ஜியர்கள்,
கலெக்டர்கள் மற்றும் காவல் துறைப் பெரிய அதிகாரிகள் எல்லாம், ”நாங்கள்
பெருந்தலைவர் காமராஜர் கொண்டு வந்த கல்வித் திட்டங்களால் படித்து, வேலைவாய்ப்புப்
பெற்று உயர்ந்த நிலையில் இருக்கிறோம்” – என்று நன்றியுடன் சொல்லிக் கேட்கலாம்.
”கண்ணுடையோர்-என்பார்-கற்றோர்–முகத்திரண்டு
புண்ணுடையோர் -கல்லாதவர்”
புண்ணுடையோர் -கல்லாதவர்”
– என்றார் திருவள்ளுவர். கல்வி பெற்றோரே கண்ணுடையவர்கள்,
மற்றவர்கள் முகத்திரண்டு புண்ணுடையவர்கள் என்பதே வள்ளுவர் கருத்து.
தமிழகத்தில், பட்டி தொட்டிகள், சிற்றூர்கள், பேரூர்கள், நகரங்கள்,
பட்டணங்களில் எல்லாம் எல்லோர்க்கும் கல்வியை அளித்த பெருந்தலைவர் காமராஜரைத்
தமிழகத்தில், ”கல்விக் கண் திறந்து வைத்தவர்” – என்று சொல்வதிலே
தவறேதுமில்லையல்லவா.
இந்தியாவில் அன்று மேற்கு வங்காளமும், கேரளாவும்தான் கலவியில்
சிறந்து விளங்கியது. அந்த அளவிற்குத் திட்டங்கள் தீட்டித் தமிழகத்தில் கல்வியை
எங்கும் பரப்பியவர் காமராஜரே என்றால் அது மிகையாகாது.
மதிய உணவுகள் மாணவ – மாணவியர்களுக்குப் போகும் திட்டம் தொடங்கப்பட்ட காலத்தில் அந்தந்த மாவட்டத்தில் இருந்த பணக்காரர்களிடம் நன்கொடைகள் வசூலித்தே போடப்பட்டது. பெரும்பாலோனோர்,
மதிய உணவுகள் மாணவ – மாணவியர்களுக்குப் போகும் திட்டம் தொடங்கப்பட்ட காலத்தில் அந்தந்த மாவட்டத்தில் இருந்த பணக்காரர்களிடம் நன்கொடைகள் வசூலித்தே போடப்பட்டது. பெரும்பாலோனோர்,
”மண்டினி-ஞாலத்து-மக்கட்கெல்லாம்
உண்டி -கொடுத்தோர் -உயிர்கொடுத்தோரே”
உண்டி -கொடுத்தோர் -உயிர்கொடுத்தோரே”
– என்று உதவிடத்தான் செய்தார்கள். அதிலும் பள்ளியில் படிக்கும்
ஏழைப் பிள்ளைகளுக்கு உணவுகள் வழங்குவதில் அவர்கள் தர்ம சிந்தனையோடு தாராளமாக்க்
கொடுத்தும் உதவி செய்தார்கள்.
தென்மாவட்டங்களில் சிலபல ஊர்களில், அறுவடை காலங்களில்
இத்திட்டத்திற்காக ஒரு மரக்கால், இரண்டு மரக்கால் என்றும் அளந்து கொடுத்தார்கள்.
எட்டயபுரம் மகாராஜா கூட இத்திட்டத்திற்கு உதவி செய்தார்.
மழைக்காலம் அல்லது பஞ்ச காலம் என்று வந்துவிட்டால், கொடுத்தவர்கள்
நிறுத்திக்கொண்டார்கள். இதனைக் கருத்தில் கொண்ட பெருந்தலைவர் காமராஜர்,
எக்காலத்திலும் மதிய உணவு கிடைக்க அரசாங்கமே வழிவகை செய்யும்படி உத்தரவிட்டார்.
இதனால் தமிழ்நாட்டில் உள்ள எல்லாப் பள்ளிகளும் மதிய உணவு தங்கு
தடையின்றி வழங்கப்பட்டது. கல்விக்காக ஆண்டுதோறும் ஒதுக்கப்படும் தொகையில்
இத்திட்டத்திற்காகவும் சேர்த்து அதிகப் பணம் ஒதுக்கிட அவர் ஏற்பாடு செய்தார்.
அந்தந்த திட்டத்தை அமுல்படுத்தும்போது அவைகளுக்குச் சம்பந்தப்பட்ட
உயர் அதிகாரிகளைக் காமராஜர் என்றும் கலந்து ஆலோசிக்கத் தவறியதே இல்லை. அவர்கள்
அரசாங்க ஊழியர்களே என்றாலும் கூட அவர்களுக்குத் தக்க மரியாதைகளைக் கொடுத்தார்.
தன் கூடவே முதலமைச்சர் காரிலேயே அவர்களைப் பற்பல ஊர்களுக்கு உடன்
அழைத்தும் சென்றார். அதிகாரிகளுக்கு இந்த நடவடிக்கை அதிசயமாக, ஆச்சர்யமாக, அதிர்ச்சியாகக்கூட
இருந்தது எனலாம்.
காரிலே போகும்போது அவர்களை அந்தத் திட்டம் பற்றிய பல் வேறு
பிரச்சினைகளையும், அவைகளைத் தீர்த்து வைக்கும் வழிமுறைகளையும் காமராஜர்
சொல்லிக்கொண்டே போவார்.
இப்படித்தான் அன்று பள்ளிக் கல்வி இயக்குனராக இருந்த திரு. நெ.து.
சுந்தர வடிவேலுவைக் காமராஜர் பலமுறை தன்னோடு, தனது காரிலேயே அழைத்துச்
சென்றிருக்கிறார்.
குற்றம், குறைகள் சற்றும் நிகழ்ந்து விடாதபடி கண்காணித்துக்
கொள்வதிலே காமராஜர் கண்ணும் கருத்துமாய் இருந்தார். பொற்கால ஆட்சியினைத்
தமிழ்நாட்டில் காமராஜர் புகுத்திப் புகழ் சேர்த்துக் கொண்டார். கல்விக்காகவும்,
தமிழகத்தில் கல்வி முன்னேற்றத்திற்காகவும் காமராஜர் கையாண்ட கொள்கைகள்,
நடைமுறைப்படுத்திய திட்டங்கள் எண்ணிலடங்காதவைகளாகும்.
முதலமைச்சராக ஆற்றிய பணிகள்:
ராசாசி கொண்டு வந்திருந்த
குலக்கல்வித் திட்டத்தினைக் கைவிட்டார். அவரது ஆட்சிக் காலத்திற்குள் தமிழகத்தில்
பள்ளிகளின் எண்ணிக்கை 27000 ஆனது. (1920 இல் நீதிக்கட்சி அரசு ஆதரவுடன் சென்னை
மாநகராட்சியில் மதிய உணவுத் திட்டம் கொண்டுவரப்பட்டது. முதலில் ஆயிரம் விளக்குப்
பகுதியில் இருந்த ஒரு மாநகராட்சிப் பள்ளியில் காலை உணவுத் திட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டது.
பின் மேலும் நான்கு பள்ளிகளுக்கு விரிவு படுத்தப்பட்டது. இத்திட்டமே 1960 களில்
காமராசரால் அறிமுகப்படுத்தப்பட்டு எம். ஜி. ராமச்சந்திரனால் 1980 களில்
விரிவுபடுத்தப்பட்ட சத்துணவுத் திட்டத்தின் முன்னோடியாகும்.)அவரது மதிய உணவுத்
திட்டம் இன்று உலக அளவில் பாராட்டப்படும் திட்டமாகும். அதன் பலனாகப் பள்ளிகளில்
படிப்போரின் எண்ணிக்கை 37 விழுக்காடாக உயர்ந்தது. (பிரித்தானியர் காலத்தில் இது 7
விழுக்காடாக இருந்தது). பள்ளிகளில் வேலைநாட்கள் 180 இல் இருந்து 200 ஆக
உயர்த்தப்பட்டது. சென்னை இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம் தொடங்கப்பட்டது.
காமராசர் முதலமைச்சராகப் பதவி
வகித்த காலங்களில் நாட்டு முன்னேற்றம், நாட்டு மக்களின் வாழ்க்கை முன்னேற்றம்,
கல்வி, தொழில் வளத்துக்கு முன்னுரிமையளித்து பல திட்டங்களை நிறைவேற்றினார். அவரது
ஆட்சியின் கீழ் 9 முக்கிய நீர்பாசனத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. அவைகீழ் பவானித்திட்டம், மேட்டூர்
கால்வாய்த்திட்டம், காவேரி டெல்டா வடிகால் அபிவிருத்தி திட்டம், மணிமுத்தாறு, அமராவதி, வைகை, சாத்தனூர், கிருசுணகிரி, ஆரணியாறு ஆகியவையாகும். கன்னியாகுமரி மாவட்டத்தில்
மலை கிராமங்களுக்குக் குடிநீர் பிரச்சனையை தீர்ப்பதற்காகக் காமராசரால் கட்டப்பட்ட மாத்தூர் தொட்டிப் பாலம்ஆசியாவின்
மிகப்பெரிய தொட்டிப்பாலமாக இன்றளவும் உள்ளது.
அவர் காலத்தில் தமிழகத்தில்
தொடங்கப்பட்ட முக்கிய பொதுத் துறை நிறுவனங்களும் பெருந்தொழிற்சாலைகளும்:
·
பாரத மிகு மின் நிறுவனம்
·
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்
·
மணலி சென்னை
சுத்திகரிப்பு நிலையம் (MRL இதன் தற்போதைய பெயர் CPCL)
·
இரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலை (ICF)
·
நீலகிரி
புகைப்படச் சுருள் தொழிற்சாலை
·
கிண்டி மருத்துவ
சோதனைக் கருவிகள் தொழிற்சாலை
·
மேட்டூர் காகிதத்
தொழிற்சாலை
குந்தா மின் திட்டமும், நெய்வேலி மற்றும் ஊட்டி ஆகிய இடங்களின்
வெப்ப மின் திட்டங்களும் காமராசரால் ஏற்படுத்தப்பட்டவை.
காமராசர் முதல் அமைச்சரான முதல்
ஆண்டிலேயே அனைத்துத் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கும் ஓய்வு ஊதியம் வழங்க
ஆணையிட்டார். பின்னர் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கும் அதன்பின்னர் தனியார்
கல்லூரி ஆசிரியர்களுக்கும் ஓய்வு ஊதியம் வழங்கும்படி ஓய்வு ஊதியத் திட்டத்தை
நீட்டித்தார்.
1967 ஆம் ஆண்டுத் தேர்தல் தோல்வி
1967 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக
சட்டமன்றப் பொதுத் தேர்தலில் தமது சொந்த ஊரான விருதுநகர் தொகுதியில் பெ. சீனிவாசன்என்பவரால் 1,285 வாக்குகள்
வேறுபாட்டில் தோற்கடிக்கப்பட்டார். நாகர்கோயில் மக்களவைத் தொகுதியில் 1969 இல் நடைபெற்ற இடைத்தேர்தலில் வெற்றி
பெற்றார்
இறுதிக் காலம்
காமராசருக்கு இந்திராகாந்தியுடன்
ஏற்பட்ட பிணக்கின் காரணமாகக் காங்கிரசு கட்சி இரண்டாக உடையும் நிலை ஏற்பட்டது.
காமராசரின் தலைமையிலான சிண்டிகேட் காங்கிரசு தமிழக அளவில் செல்வாக்குடன் திகழ்ந்தது.
ஆனாலும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாபெரும் வளர்ச்சியால் அதன் பலம் குன்றிப்
போகக் காமராசர் தன்னுடைய அரசியல் பயணத்தைத் தமிழக அளவில் சுருக்கிக் கொண்டார்.
தமிழக ஆட்சியாளர்களின் தவறுகளைச் சுட்டிக் காட்டி வந்தார். இந்திரா காந்தி
நெருக்கடி நிலையினை அமல் செய்தபோது அதனைக் கடுமையாக எதிர்த்தவர்களில் காமராசரும்
ஒருவர். இந்தியாவின் அரசியல் போக்குகுறித்து மிகுந்த குறையும் கவலையும்
கொண்டிருந்த நிலையில் காமராசர் இருந்தார், இந்தியாவின் விடுதலைக்குப் பாடுபட்ட ஜெயப்பிரகாஷ் நாராயணன், மொரார்ஜி தேசாய் மற்றும்
பல தலைவர்கள் இக்காலகட்டத்தில் இந்திரா காந்தி அரசால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
அக்டோபர் இரண்டு காந்தியடிகள் பிறந்த நாளன்று அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள்
என்று எதிர்பார்த்திருந்தார் காமராசர். ஆனால், அன்று ஆச்சார்ய கிருபளானியும் கைது செய்யப்பட்டார் என்ற செய்தியைக்
கேட்ட அன்றே உயிர் துறந்தார். 1975 அக்டோபர்
திங்கள் இரண்டாம் நாள் (காந்தியின் பிறந்தநாள்) மதிய உறக்கத்திற்குப் பின்னர் அவரின்
உயிர் பிரிந்தது.
அவர் இறந்தபோது பையில் இருந்த
சிறிதளவு பணத்தைத் தவிர
வேறு வங்கிக்
கணக்கோ, சொந்த வீடோ, வேறு எந்த
வித சொத்தோ இல்லை என்பது
குறிப்பிடத்தக்கது. தன் வாழ்நாள் இறுதி
வரை வாடகை வீட்டிலேயே வசித்தார்.
காமராஜர் காலம் ஏன் பொற்காலம்?
காமராஜர்
ஆட்சிக் காலகட்டத்தைத் தமிழகத்தின் பொற்கால ஆட்சி என்று சொல்லும்போது, பலரும் ஏதோ
அதை வெற்றுப் புகழாரம்போலவே இன்றைக்கு நினைக்கின்றனர். இந்தத் தலைமுறையைச் சேர்ந்த
காங்கிரஸார் பலருக்குமேகூட அந்த வார்த்தைகளின் பின்னால் உள்ள பெறுமதி
தெரிந்திருக்க வாய்ப்பில்லை. “மூவேந்தர்கள் ஆட்சிக்காலத்தில் நிகழாத அற்புதங்கள்
எல்லாம் தமிழகத்தில் நடந்தது காமராஜர் ஆட்சியில்!” இப்படிக் கூறியவர் யார்
தெரியுமா? தந்தை பெரியார். உண்மையில், காமராஜர் ஆண்ட அந்த ஒன்பது ஆண்டுகளில்
தமிழகத்தில் என்ன நடந்தது? ஏன் வரலாறு தெரிந்தவர்கள் இன்றைக்கும் அதைப் பொற்கால
ஆட்சி என்று கூறுகின்றனர்? முக்கியமான சில பதிவுகளை மட்டும் தருகிறேன்.
இன்றைக்கு
தமிழக அரசின் 2014-15-ம் ஆண்டுக்கான மொத்த பட்ஜெட் தொகை ரூ. 1.27 லட்சம் கோடி.
ஆனால், காமராஜர் முதல்வராகப் பொறுப்பேற்ற 1954-55-ல் மொத்த பட்ஜெட் தொகை எவ்வளவு
தெரியுமா? ரூ.47.18 கோடி. அவர் பதவி விலகியபோது 1962-63-ல் ரூ.121.81 கோடி.
அன்றைக்கெல்லாம் ஒட்டுமொத்த இந்தியாவுமே ஏழை தேசம்தான். இப்படிப்பட்ட
பின்னணியில்தான் மகத்தான காரியங்களை காமராஜர் தன் ஆட்சியில் மேற்கொண்டார். அவருடைய
சாதனைகளைப் படிக்கும் முன், அன்றைய தமிழகத்தின் இந்த மொத்த நிதியாதாரப் பின்னணியை
நாம் கருத்தில் கொள்வது முக்கியம்.
முதல் திருத்தத்தின் மூலவர்
தமிழகத்தில்
நீண்டகாலமாக அமலில் இருந்த, பின்தங்கிய சமுதாயத்தினருக்கான இடஒதுக்கீட்டை
உறுதிசெய்யும் ‘கம்யூனல் ஜி.ஓ.’ செல்லாது என சென்னை உயர் நீதிமன்றமும் உச்ச
நீதிமன்றமும் வழங்கிய தீர்ப்பு கடும் கொந்தளிப்பை உருவாக்கியது. இந்நிலைமையை நன்கு
உணர்ந்த காமராஜர், பிரதமர் நேருவிடம் வலியுறுத்தி அரசமைப்புச் சட்டத்தில் முதல்
திருத்தம் கொண்டுவர வித்திட்டார். அரசமைப்புச் சட்டம் அமலுக்கு வந்த சில
மாதங்களிலேயே 1951-ல் அதில் திருத்தம் கொண்டுவரக் காரணமாக இருந்து, பின்தங்கிய
சமுதாய மாணவர்கள் கல்வி, வேலைவாய்ப்புகளில் பெற்றுவந்த இடஒதுக்கீட்டு உரிமையைப்
பெற்றுத் தந்தவர் காமராஜர். இதனால் அவரை ‘முதல் திருத்தத்தின் மூலவர்’ என்று
தமிழகம் போற்றிப் பாராட்டி அழைத்துப் பெருமிதம் கொண்டது.
சமூக நீதிக்கான ஆட்சி
தமிழகத்தின்
முதலமைச்சராக ஏப்ரல் 13, 1954-ல் பொறுப்பேற்ற காமராஜர், அக்டோபர் 2, 1963 வரை
ஒன்பதரை ஆண்டு காலம் ஆட்சி செய்தார். முதலில் எட்டு, பிறகு ஒன்பது அமைச்சர்களோடும்
எளிமையான, நேர்மை யான ஆட்சி நடத்தினார். தமது முதல் அமைச்சரவையை உருவாக்கும்போது,
ஹரிஜனத் தலைவரான பி.பரமேசு வரனுக்கு இந்து அறநிலையத் துறையை அளித்தார். உழைப்பாளர்
கட்சித் தலைவரான எஸ்.எஸ். ராமசாமி படையாச்சியைக் காங்கிரஸில் இணைத்து, அமைச்சர்
பொறுப்பு வழங்கி, பின்தங்கிய மக்களை முன்னேற்றப் பாதையில் பயணம் செய்ய
வழிவகுத்தார்
.
கல்விப் புரட்சி
காமராஜர்
முதலமைச்சராகப் பொறுப்பேற்றதும் முதல் நடவடிக்கையே குலக்கல்விமுறை ஒழிப்புதான்.
“சிலர் பரம்பரைத் தொழிலையே செய்து வர வேண்டும் என்கிறார்கள். நாம் கீழேயே இருக்க
வேண்டுமாம். நம்மைப் படிக்காதவர்களாக வைத்திருந்து, நாம் ரோடு போடவும், கல்
உடைக்கவும், ஏர் ஓட்டவும், சேறு சகதியில் நாற்று நடவும் பயன்பட வேண்டுமாம்.
அவர்கள்
மட்டும் நகத்தில் மண் படாமல் வேலை செய்து முன்னேற வேண்டுமாம். எப்படியிருக்கிறது
நியாயம்? நாமும் படித்து, நாலு தொழில் செய்து முன்னேற வேண்டாமா?” என்று நறுக்குத்
தெறித்தார்போல் கூறினார்.
எந்தச்
சொத்தும் இல்லாதவர்களுக்குக் கல்வி என்ற சொத்தை வழங்கி, வாழ்க்கையில்
முன்னேற்றிவிட வேண்டும் என்ற நோக்கத்தில் இலவசக் கல்வியையும், மதிய உணவுத்
திட்டத்தையும் கொண்டுவந்தார். இதனால் 1957-ல் 15,800 ஆக இருந்த தொடக்கப் பள்ளிகள்,
1962-ல் 29,000 ஆக உயர்ந்தன. மாணவர் எண்ணிக்கை 19 லட்சத்திலிருந்து 40 லட்சமாக
அதிகரித்தது. 637 ஆக இருந்த உயர்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 1,995 ஆனது.
தொழில் வளர்ச்சி
ஜவாஹர்லால்
நேரு ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட முதலாவது, இரண்டாவது ஐந்தாண்டு திட்டங்களின்
முழுப் பலனையும் தமிழகம் பெற்று முன்னேறும் வகையில் கடும் முயற்சிகள்
மேற்கொள்ளப்பட்டன. அதன் பயனாக தமிழகத்தில் தொழில் புரட்சி நடந்தது. சென்னை -
பெரம்பூரில் ரயில் பெட்டித் தயாரிப்புத் தொழிற்சாலை, சென்னை, கிண்டியில்
இந்துஸ்தான் டெலிபிரிண்டர் தொழிற்சாலை, ஊட்டியில் இந்துஸ்தான் போட்டோ ஃபிலிம்
தொழிற்சாலை, திருச்சி, திருவெறும்பூரில் உயர் அழுத்த கொதிகலன் தொழிற்சாலை (BHEL)
அமைய 750 ஏக்கர் பட்டா நிலமும், 2,400 ஏக்கர் புறம்போக்கு நிலமும் வழங்கப்பட்டன.
இன்று
சர்வதேச அளவில் புகழ்பெற்று, பொதுத் துறை நிறுவனங்களிலேயே அதிக லாபத்தைத் தருகிற
‘மகாநவரத்தினா’என்ற தகுதியை பெற்றுள்ளது பெல் நிறுவனம். பாதுகாப்பு
அமைச்சகத்துக்கு உட்பட்ட ஆவடி டாங்க் ஃபேக்டரி தொழில் வளர்ச்சியில் அரசுத்
துறையோடு, தனியார் துறையும் இணைந்து பல தொழில்கள் தொடங்கப்பட்டன. ‘மதராஸ்
இண்டஸ்டிரியல் இன்வெஸ்ட்மெண்ட் கார்ப்பரேஷன், அசோக் லேலண்ட் தொழிற்சாலை, டி.ஐ.
சைக்கிள் தொழிற்சாலை, சிம்சன், இந்தியா பிஸ்டன்ஸ், டி.வி.எஸ், லூகாஸ் இவையெல்லாம்
அந்தக் காலகட்டத்தில் தொடங்கப்பட்டவைதான். 1951-ல் தமிழகத்தில் 71-ஆக இருந்த
நெசவாலைகளின் எண்ணிக்கை, 1962 முடிவில் 134-ஆகப் பெருகியது. அதேபோன்று கூட்டுறவுத்
துறையில் நூற்பு ஆலைகள் தொடங்கப்பட்டன. சர்க்கரை ஆலைகளின் எண்ணிக்கை
மூன்றிலிருந்து எட்டாக உயர்ந்தது. இவற்றின் உற்பத்தி 1 லட்சத்து 27 ஆயிரத்து 500
டன்.
மூன்றாவது
ஐந்தாண்டுத் திட்டத்தின்போது, கூடுதலாகப் பல சர்க்கரை ஆலைகள் தொடங்க ஆணை
பிறப்பிக்கப் பட்டது. ஆண்டொன்றுக்கு 20 ஆயிரம் டன் காகிதம் உற்பத்தி செய்யக்கூடிய
ஆலையை ஈரோடு அருகே பள்ளிபாளையத்தில் சேஷசாயி காகிதம் மற்றும் போர்டுகள் லிமிடெட்
நிறுவனம் தொடங்கியது. அதே போன்று, மாநிலத்தில் கூடுதலாக காகிதக்கூழ் மற்றும்
வைக்கோல் அட்டைகள் தயாரிக்க எட்டு ஆலைகள் தொடங்குவதற்கு உரிமை வழங்கப்பட்டது. கோவை
மாவட்டம் மதுக்கரை, திருச்சி மாவட்டம் டால்மியாபுரம், ராமநாதபுர மாவட்டம்
துலுக்கப்பட்டி, திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து என நான்கு சிமெண்ட் தயாரிக்கும்
ஆலைகள் தொடங்கப்பட்டன.
இரண்டாவது
ஐந்தாண்டுத் திட்டத்தின்போது ‘மெட்ராஸ் சிமெண்ட்ஸ் லிமிடெட்’ என்ற ஒரு புதிய
சிமெண்ட் ஆலை ராஜபாளையத்தில் தொடங்கப்பட்டது. 1962-ல் சேலம், சங்கரிதுர்க்கம் என்ற
இடத்தில் சிமெண்ட் தொழிற்சாலை தொடங்குவதற்கு உரிமம் வழங்கப்பட்டது. கரூரில்
மற்றொரு ஆலை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தொழிற்பேட்டைகள்
காமராஜர்
ஆட்சிக்காலத்தில் தொழில் வளர்ச்சிக்காகவும், வேலைவாய்ப்பு வழங்கவும்
தொழிற்பேட்டைகள் சென்னை, கிண்டி, விருதுநகரில் தொடங்கப்பட்டன. இவற்றின் பயன்கள்
அதிகரித்ததைத் தொடர்ந்து கும்பகோணம், விருத்தாசலம், கிருஷ்ணகிரி, தேனி,
திண்டுக்கல், கோவில்பட்டி, ராஜ பாளையம், நாகார்கோவில், சென்னையை அடுத்த அம்பத்தூர்
போன்ற இடங்களில் இத்தகைய தொழிற் பேட்டைகளை உருவாக்குதவற்காக ரூ.4.08 கோடி ஒதுக்கப்
பட்டது. இவற்றைத் தவிர மதுரை, திருநெல்வேலி, திருச்சி மற்றும் மார்த்தாண்டம்
(கன்னியா குமரி) ஆகிய இடங்களில் தொழிற்பேட்டைகள் தொடங்கப் பட்டன. சென்னை
அம்பத்தூரில் தொழிற்பேட்டை தொடங்கி 1,200 ஏக்கர் நிலம் வழங்கி இடஒதுக்கீட்டுடன்
400 தொழிற்கூடங்கள் அமைக்கப்பட்டன.
பாசனத் திட்டங்கள்
மொழிவாரி
மாநிலங்கள் அமைக்கப்பட்ட பிறகு தமிழகம் தனது நீர்வளத்தைப் பெருக்க உரிய பாசனத்
திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக காமராஜர் தீவிர முயற்சிகளை
மேற்கொண்டார். அவற்றின் பயனாக கீழ்பவானி திட்டம், மணிமுத்தாறு திட்டம், மேட்டுர்
கால்வாய் திட்டம், ஆரணியாறு திட்டம், அமராவதி திட்டம், வைகை திட்டம், சாத்தனூர்
திட்டம், கிருஷ்ணகிரி திட்டம், 30 லட்ச ரூபாய் மதிப்பிலான காவிரி கழிமுக வடிகால்
திட்டம் ஆகியவை உருவாகின.
இவை தவிர,
இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டகாலத்தில் புள்ளம்பாடி வாய்க்கால் திட்டம், புதிய
கட்டளைத் திட்டம், வீடூர் நீர்த்தேக்கத் திட்டம், கொடையாறு வாய்க்கால் திட்டம்,
நெய்யாறு திட்டம், பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டம் ஆகிய ஏழு புதிய திட்டங்களும்
மேற்கொள்ளப்பட்டன.
இரண்டாவது
ஐந்தாண்டுத் திட்ட காலத்தின்போது, மேற்கொள்ளப்பட்ட மிக முக்கிய திட்டம். இது
கிட்டத்தட்ட ரூ. 30 கோடி செலவில் நீர்ப்பாசனத்தோடு மின்சாரம் வழங்கும் பல்நோக்குத்
திட்டமாகும். கோவை மாவட்டத்தில் 2.4 லட்சம் ஏக்கர் நில பரப்புக்கும் நீர்ப்பாசன
வசதி வழங்குவதோடு, 1.80 லட்சம் கிலோவாட் திறன்கொண்ட மின்உற்பத்தி செய்யும்
திட்டங்களை அடிப்படையாகக் கொண்டதே இத்திட்டம். அம்மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி,
உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம் ஆகிய பகுதிகளுக்கு இத்திட்டம் நீர்ப்பாசன வசதி
செய்கிறது. அண்டை மாநிலங்களோடு நல்லுறவு இருந்தால் இத்தகைய நதிநீர்ப் பகிர்வுத்
திட்டங்கள் வெற்றிகரமாகச் செயல்படுத்த முடியும் என்பதற்கு இத்திட்டம் சிறந்த
எடுத்துக்காட்டு.
மின்உற்பத்தி
காமராஜர்
ஆட்சிக்காலத்தில் மின்உற்பத்தியில் வியக்கத் தக்க சாதனைகள் நிகழ்த்தப்பட்டன.
மின்உற்பத்தியிலும், அதைப் பயன்படுத்துவதிலும் சென்னை மாகாணம் இந்தியாவில்
மூன்றாவது இடத்தை வகித்தது. காமராஜர் ஆட்சியில்தான் பெரியார் நீர்மின்உற்பத்தித்
திட்டம், குந்தா நீர்மின்உற்பத்தித் திட்டம் தொடங்கப்பட்டது. நெய்வேலி பழுப்பு
நிலக்கரித் திட்டம் ரூ. 86 கோடி முதலீட்டில் தொடங்கப்பட்டது. இதன்மூலம் மின்
உற்பத்தியில் மகத்தான சாதனைகள் நிகழ்ந்தன. இன்று ரூ.1,500 கோடிக்கும்மேல் லாபம்
ஈட்டித்தரும் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமாக வளர்ந்துள்ளது.
சென்னை
மாகாணத்தின் மின்பற்றாக்குறையைச் சமாளிப் பதற்காக 5 லட்சம் கிலோவாட்
மின்உற்பத்தித் திறன்கொண்ட அணுமின் நிலையத்தைக் கல்பாக்கத்தில் அமைக்க முயற்சிகள்
மேற்கொண்ட காமராஜர், இந்திய அரசின் அணுமின் உற்பத்தித் துறையை அணுகி,
இத்திட்டத்தைப் பெறுவதில் வெற்றிகண்டார். அதன் பயன்களைத் தமிழகம் உள்ளிட்ட தென்
மாநிலங்கள் இன்று அனுபவித்துவருகின்றன.
நிலச் சீர்திருத்தம்
காமராஜர்
ஆட்சிப் பொறுப்பேற்ற உடனேயே நிலச் சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
குத்தகைதாரர்களின் பாதுகாப்புக்காக, ‘குத்தகைதாரர் பாதுகாப்புச் சட்டம் - 1955’
காமராஜர் ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. நிலச் சீர்திருத்தத்தை மேன்மைப்படுத்தும்
நடவடிக்கையாக 30 ஸ்டாண்டர்டு ஏக்கர் நிலத்துக்கும்மேல் வைத்திருந்தால் அவற்றை
அரசுடமையாக்கும் நில உச்சவரம்புச் சட்டம் 1962-ல் கொண்டுவரப்பட்டது.
பஞ்சாயத்து ராஜ்
காங்கிரஸ்
ஆட்சிக்காலத்தில் கிராமப்புற மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக, பஞ்சாயத்து
ஆட்சி செயல்படுத்தப்பட்டது. ராஜஸ்தான் மாநிலத்தில் பஞ்சாயத்து ராஜ் அமைப்பை நேரு
தொடங்கியதையொட்டி தமிழ்நாடு பஞ்சாயத்துச் சட்டம் 1958-ல் காமராஜர் ஆட்சியில்
கொண்டுவரப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் காமராஜர் ஆட்சியில் 373 பஞ்சாயத்து
யூனியன்களும், 12 ஆயிரம் பஞ்சாயத்துக்களும் தொடங்கப்பட்டுச் செயல்படத் தொடங்கின.
தமிழ் வளர்ச்சி
சென்னை
மாகாணத்தின் பட்ஜெட்டை 1957-58-ல் தமிழிலேயே சமர்ப்பித்தார் காமராஜர். 1956-ல்
தமிழ் ஆட்சி மொழிச்சட்டம் கொண்டுவந்ததும் காமராஜர் ஆட்சியே. 1959 ஜனவரியில், தமிழ்
அறிஞர்களை உறுப்பினர்களாகக் கொண்ட ‘தமிழ் வளர்ச்சி ஆராய்ச்சி மன்றம்’ என்ற அமைப்பு
தொடங்கப்பட்டது. இந்த அமைப்பின் தலைவராகக் கல்வி அமைச்சர் நியமிக்கப்பட்டார்.
கல்லூரிப் பாடங்களைக் கற்பிக்கும் மொழியாக தமிழைக் கொண்டுவரவும் மலிவான விலையில்
உயர் கல்விக்கான பாடநூல்களைத் தமிழில் வெளியிடவும் இந்த அமைப்பு செயல்பட்டது.
இத்துடன் ‘தமிழ்ப்பாடநூல் வெளியீட்டுக் கழகம்’ தோற்றுவிக்கப்பட்டது. தமிழைப்
பயிற்றுமொழியாகக் கொண்டு படிப்பவர்களுக்கு மாத ஊக்கத்தொகையும், அரசு
வேலைவாய்ப்புகளில் முன்னுரிமையும் வழங்கப்பட்டன. பாடங்கள் தொடர்பான ஆங்கில நூல்கள்
தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டன.
காமராஜர்
ஆட்சிக்காலத்தில்தான் கலைச்சொல் அகராதி 1960-ல் வெளியிடப்பட்டது. 1956-ல் மொழிவாரி
மாநிலம் அமைக்கப்பட்டவுடன் ‘மெட்ராஸ் ஸ்டேட்’ என்பதை ‘தமிழ்நாடு’ என்று மாற்றி
அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதுகுறித்து சட்டமன்றத்தில் 24.2.1961-ல்
நடந்த விவாதத்தில் உரையாற்றிய சி.சுப்பிரமணியம், “மெட்ராஸ் ஸ்டேட் என்று
குறிப்பிடப்படும் இடத்தில் சென்னை ராஜ்யம் என்று எழுதுவதற்குப் பதில் தமிழ்நாடு
என்று எழுதலாம் என பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்’என்று தெரிவித்தார்.
சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பெரும் ஆரவாரம் செய்து வரவேற்றனர்.
எளிமை நேர்மை - தூய்மை
எல்லாவற்றையும்விட
முக்கியமானது இது. காமராஜரின் பொதுவாழ்க்கை எளிமை, நேர்மை, தூய்மை எனும் தாரக
மந்திரத்தை அடிப்படையாகக் கொண்டது. முதல்வராக இருந்த காலத்தில் சென்னையில் உள்ள
தனது வீட்டில் தனது தாயைக்கூட இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு மேலாகத் தங்க
காமராஜர் அனுமதித்ததில்லை. தனது சம்பளத்திலிருந்து மாதம் ரூ.120 கொடுத்து
விருதுநகரில்தான் தனது தாயைத் தங்கவைத்திருந்தார். தன்னைச் சுற்றி தனது
குடும்பத்தினர், உறவினர் இருக்கக் கூடாது என்பதில் மிகவும் கண்டிப்பாக இருந்தார்
என்ற ஒரு செய்தி போதும், கறை படியாத கைகளுக்கு.
காமராசரைப் பற்றிய கருத்துக்கள்:
காமராஜர்
ஆட்சியைப் பிரதமர் நேரு உள்ளிட்ட தேசியத் தலைவர்கள் அனைவருமே மனதாரப்
பாராட்டியுள்ளனர். முக்கியமான பாராட்டு, காங்கிரஸ் கட்சியைக் கடுமையாக விமர்சித்த
தந்தை பெரியாருடையது. சுமார் ஒன்பதரை ஆண்டு காலம் காமராஜர் ஆட்சியைத் தம் தோள்மீது
சுமந்து, தமிழகம் முழுவதும்
சுற்றுப்பயணம்செய்து பிரச்சாரம் செய்து ஆதரவு
திரட்டினார் பெரியார்.
·
“தனது பலவித
கஷ்டங்களையும் பொருட்படுத்தாது, சதா காலமும் நாட்டின் நலன்களிலே ஈடுபட்டுள்ள
உள்ளத்தைப் பெற்றவரே சகல தர்மங்களையும், நிதிகளையும் நன்குணர்ந்தவரே காமராசு,
காமராசு மகாபுருசர்.”-காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீ சந்திரசேகர சரசுவதி
·
"திறமை, நல்லாட்சி,
இவைகளுக்கு எடுத்துக்காட்டாக இருக்கும் ஓர் அரசாங்கத்திற்குத் தலைவர் என்ற முறையில்
காமராசர் சென்னை முதல் அமைச்சராக இருக்கிறார். மக்களுக்கு மேலும் மேலும் தொண்டுபுரிய
அவர் நீண்ட காலம் வாழ்வாரென நான் நம்புகிறேன். -நேரு
·
இந்த நாடு உருப்பட வேண்டுமானால் இன்னும் 10 ஆண்டுகளுக்காவது
காமராசரை விட்டுவிடாமல் பிடித்துக்கொள்ளுங்கள். அவரது ஆட்சிமூலம் சுகமடையுங்கள்.
காமராசரைப் பயன்படுத்திக் கொள்ள நாம் தவறிவிட்டால், தமிழர்களுக்கு வாழ்வளிக்க வேறு
ஆளே சிக்காது.” “சென்ற இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தமிழகத்தில் ஏற்படாத மறுமலர்ச்சியும்
விழிப்பும் இப்போது ஏற்பட்டுள்ளன. இதற்குக் காரணம் நமது காமராசர்தான். ஊர்தோறும் சாரம்
தொழில்வளம் ஏற்பட்டுள்ளன. மூவேந்தர் காலத்தில்கூட நிகழாத இந்த அதிசயத்தைச் சாதித்த
நமது காமராசரின் அறிவுத்திறனை மறுக்க முடியுமா?" -பெரியார்.
·
“காமராசு தோற்றத்தில் மட்டுமின்றி
மதிநுட்பத்திலும் மக்களையும், அவர்களுடைய பிரச்சினகளையும் புரிந்து கொள்வதிலும் அப்பிரச்சினைகளுக்கு
தீர்வு காண்பதிலும் நாட்டம் மிகுந்த தலைவராக விளங்குகிறார்.” -இந்திரா காந்தி
·
"சத்தியமூர்த்திக்கு
பின்னர் காமராசை நான் பிள்ளையாகப் பார்த்திருக்கிறேன். நான் இன்னும் அப்படியே இருக்கிறேன்.
அவர் உயர்ந்திருக்கிறார். அன்று அவரை நான் குனிந்து பார்த்தேன். இன்று அண்ணாந்து பார்க்கிறேன்."
-சிதம்பரம் சுப்ரமண்யம்
·
"காமராசர் என் தலைவர்,
அண்ணா என் வழிகாட்டி"- ம. கோ. இராமச்சந்திரன்
·
"தியாகச் சுடர், தமிழ்
மக்களின் நெஞ்சில் நீங்காத இடம் பெற்றவர்."- கருணாநிதி
காமராஜரின்
ஆட்சிக் காலம் ஏன் தமிழகத்தின் பொற்காலம் என்பதற்கு இதைவிடவும் சான்று வேண்டுமோ?
இன்றைக்கு தமிழகம் கண்டுள்ள பல வளர்ச்சிகளுக்கும் பிள்ளையார் சுழி
போட்டவர் இந்த கருப்புத் தங்கம்தான். நல்ல தலைவர் கிடைக்காமல் தத்தளித்து வரும்
இன்றைய தமிழகத்திற்கு, உண்மையிலேயே பெரும் தலைவராக விளங்கியவர் காமராஜர் மட்டுமே.
தமிழகத்தின் உண்மையான பொற்கால ஆட்சி என்றால் அது காமராஜரின் ஆட்சி மட்டுமே.
மீண்டும் காமராஜரின் ஆட்சி வருமா... கண்ணுக்கு எட்டிய தூரம் வரை அது பெரும்
கனவாகவே தோன்றுகிறது...
நம் தலைமுறையின் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்
KARTHIKKN
https://youtu.be/7YEd1B8uhSk
ReplyDeleteஊக்கிவித்து உதவுங்கள்