Thursday, 30 June 2016

ஜூலை 1: தேசிய மருத்துவர்கள் தினம் - சிறப்பு பகிர்வு


தேசிய மருத்துவர்கள் தினம் - 


சிறப்பு பகிர்வு




தேசிய மருத்துவர் தினம் -(NATIONAL DOCTORS DAY)
 1 ஜூலை - (July-1)

இந்தியாவில் மருத்துவர் தின வரலாறு

ஒவ்வொரு ஆண்டும் ஜூலை ஒன்றாம்  தேதி நம் நாட்டில் தேசிய மருத்துவர் தினம் கொண்டாடப்படுகிறது ,மருத்துவர் தினம் நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது.
இந்தியா பல பிரபலமான மருத்துவர்களை உருவாக்கியுள்ளது. அவர்களுள் ஒருவரே புகழ்பெற்ற மருத்துவராகவும், மேற்கு வங்கத்தின் இரண்டாம் முதலமைச்சராகவும் விளங்கிய டாக்டர். பிதன் சந்திர ராய் (பி.சி.ராய்). அவரது நினைவைப் போற்றும் வண்ணமாக அவருடைய பிறந்த மற்றும் இறந்த தினமான ஜூலை ஒன்றாம் தேதி தேசிய மருத்துவர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

 அவருக்குப் புகழாரம் சூட்ட, 1991-ஆம் ஆண்டில் இருந்து இந்நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அவர் பல நிறுவனங்களையும் மருத்துவ மனைகளையும் தொடங்கி இந்திய சமுதாய வளர்ச்சிக்காகப் பல நன்மைகளை ஆற்றினார்.
மேற்கு வங்க மாநிலம் தோற்றுவிக்கப்பட்டு இரண்டாவது முதல் அமைச்சராக  இருந்தவர் பிடன் சந்திர ராய் (பி.சி.ராய்). 1882-ம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி பிறந்த இவர், நாட்டிலேயே தலைசிறந்த மருத்துவராக இருந்துள்ளார். (1948-ஆம் ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி முதல் 1962 ஜூலை 1-ஆம் தேதி வரை) 14 ஆண்டுகள் மேற்கு வங்க மாநில முதல்வராக திறம்பட பணியாற்றி உள்ளார். மருத்துவத்துறையில் திறம்பட பணியாற்றி பல்வேறு சாதனைகளை படைத்ததுடன், தன்னலம் பாராது பிறர்நலன் கருதி மகத்தான மருத்துவச் சேவை செய்ததால், மத்தியஅரசு 1961-ஆம் ஆண்டு பிப்ரவரி 4-ஆம் தேதி பிடன் சந்திரராய்க்கு பாரத ரத்னா விருது வழங்கி கவுரவித்தது.



உலகம் முழுவதும் மருத்துவம் ஓர் உன்னதமானத் தொழிலாகக் கருதப்படுகிறது. சிறந்த சுகாதாரப் பராமரிப்பை வழங்குவதில் செவிலியர், தொழில்நுட்ப வல்லுநர்கள் போன்ற பலரின் கூட்டு முயற்சி அடங்கி இருந்தாலும் அக்குழுவை வழிநடத்திச் செல்பவர் மருத்துவரே. இந்தியச் சூழலில் சிறந்த சுகாதாரக் கட்டமைப்பு வசதிகள் இருந்தாலும் குறிப்பாகக் கிராமப் புறங்களில் மருத்துவர்களின் பற்றாக்குறை மிகவும் அதிகமாகும். மருத்துவர்களைச் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்வது நமது நாட்டின் இன்றியமையாதத் தேவையாக உள்ளது. நாட்டிற்கு மருத்துவர்களின் பங்களிப்பைப் போற்றும் வண்ணமாகப் பல நாடுகள் ஒவ்வொரு ஆண்டும் தேசிய மருத்துவர் தினத்தைக் கடைபிடிக்கின்றன. இந்தியாவில் இது ஜூலை 1-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. பிறர் வாழ்க்கை ஆரோக்கியமாகவும் சிறப்பாகவும் அமைய மருத்துவர்கள் தங்களது சிறந்த முயற்சியை அளிக்கின்றனர்.
இந்நாளின் நோக்கங்கள்


நமது வாழ்க்கையில் மருத்துவர்கள் வகிக்கும் பங்கின் முக்கியத்துவத்தை வெளிக்காட்ட
மருத்துவர்களின் சுயநலமற்ற சேவைக்கும், தனிநபருக்கும் சமுதாயத்திற்கும் அவர்கள் வழங்கும் பங்களிப்பிற்கும் நன்றி பாராட்ட.
 ருத்துவ சேவைகளையும், சுகாதாரப் பராமரிப்பையும் சார்ந்த அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களில் இந்நாள் கொண்டாடப்படுகிறது. இந்நாளைக் கொண்டாடப் பல நிகழ்ச்சிகளும் செயல்பாடுகளும் ஒழுங்குசெய்யப் படுகின்றன. பள்ளிகளும் கல்லூரிகளும், மருத்துவம் சார்ந்த கலந்துரையாடல்களையும், புதிர்ப் போட்டிகளையும், விளையாட்டு நிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்கின்றன. நோயாளிகள் தங்கள் மருத்துவர்களை வாழ்த்திப் பாராட்டும் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்கின்றனர்.
பல அமைப்புகள் இலவச சுகாதார முகாம்களை நடத்தி இந்நாளைக் கொண்டாடுகின்றன.
மக்களின் வாழ்க்கை நலம் பேணிப் பாதுகாக்கும் மருத்துவர்களின் பங்களிப்பைப் பாராட்ட சிறந்த நேரம் தேசிய மருத்துவர் தினத்தைக் கடைபிடிக்கும் இந்நாளே ஆகும்.


ka6thikkn

Wednesday, 29 June 2016

அவமானத்திற்கு உரியதா நிர்வாணம் ...? - இது ச்ச்ச்சீ விஷயம் அல்ல!

நிர்வாணம் அவமானமா..?


1985-ம் ஆண்டு வெளிவந்த 'எமரால்ட் ஃபாரஸ்ட்'


திரைப்படத்தில் ஒரு காட்சி. நாயகியான பழங்குடி பெண்ணையும், அவளின் தோழிகளையும் நகர்ப்புற மனிதர்கள் சிலர் கடத்தி விபசாரத்தில் ஈடுபடுத்த முயல்வார்கள். அதுவரை ஆடை என்ற ஒன்றை அணிந்திராத அப்பெண்களுக்கு, குட்டைப் பாவாடையை யும் , மேற்கத்திய பாணி மேல் கச்சைகளையும் கட்டாயப்படுத்தி அணிவிப்பாரகள் 
அவர்கள் கடத்தப்பட்ட அன்றிரவே, நாயகனும் அவனது பழங்குடி நண்பர்களும் அவர்களை மீட்டு மீண்டும் கானகத்திற்கு அழைத்து வருவார்கள்.கானகத்திற்குள் நுழைந்ததும் அப்பெண்கள் செய்யும் முதல் வேலை, தங்களின் ஆடைகளை கிழித்தெறிவது. அதாவது பெண்களை சதைப் பிண்டமாக பார்க்காமல் அவர்களை சக மனிதர்களாக மட்டுமே பார்க்கும் எந்த இனத்திற்கும் ஆடை என்ற ஒன்று தேவையாக இருப்பதில்லை, நிர்வாணம், அங்கு இழிவாகப் பார்க்கப்படுவதில்லை. நிர்வாணத்தை பார்த்து எவரின் ஆண்மையும் திமிறி எழுவது இல்லை என்பதை விவரிக்கும் காட்சி அது. 
இது ஏதோ புனைவு அல்ல. பிரேசிலில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு ஜான் போர்மேன் இயக்கிய படம் அது 


மேற்கத்திய பழங்குடிகள் மட்டும் அல்ல; இந்தியாவிலும்கூட நாகரிகத்தின் நா தீண்டாமல்  வாழும் பழங்குடி மக்கள்  இன்றும் அப்படித்தான் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களைப்  பொறுத்தவரை நிர்வாணம் அவமானம் அல்ல.

ஆனால், பழங்குடிகளான அம்மக்களை நாம் நாகரிகமற்றவர்கள், உயர்த்தப்பட வேண்டியவர்கள் என்றும், அதேநேரம்  ஒரு பெண்ணை இழிவுபடுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் அவளது படத்தை மார்ஃபிங் செய்து வெளியிடும் சமூகத்தில் வாழும் நாம், நம்மை நாகரிகமானவர்கள் என்று பிதற்றித் திரிகிறோம். 

அவமானத்திற்கு உரியதா நிர்வாணம் ...?
ஆடைகளே தேவையில்லை, எல்லாம் நிர்வாணமாக அலையலாம் என்று ஆலோசனை வழங்க இந்த கட்டுரையை எழுதவில்லை. ஆடைகளுக்கென்று ஒரு தொன்மம்  இருக்கிறது, அதன் பின் சமூக, பொருளாதாரக் காரணிகள் இருக்கிறது. இயற்கையின் ஒரு அங்கமாக இப்போது நாம் வாழவில்லை. வளர்ச்சி என்னும் பெயரில் இயற்கையைவிட்டு வெகு தொலைவு தள்ளிவந்துவிட்டோம். இக்காலத்தில் நம் நிர்வாணத்தை மறைக்க ஆடைகள் நிச்சயம் தேவைதான். ஆனால், அதே நேரம் நிர்வாணம் ஒன்றும் இழிவானதல்ல என்ற புரிதலும் நமக்கு வேண்டும். 

அதுவும், தொழில்நுட்பம் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு வளர்ந்துள்ள இக்காலத்தில் பல விபரீதங்களை தவிர்க்க, தடுக்க... நிர்வாணம் இயற்கையானது, இழிவானதல்ல என்ற புரிதலை அனைவருக்கும் ஏற்படுத்த வேண்டும். அதுவும் குறிப்பாக ஆண்களுக்கு.
என்ன சொல்ல வருகிறீர்கள்...வினுப்ரியாவை ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டது தவறல்ல... அதை செய்தவன் தண்டனைக்குரியவன் அல்ல என்று விஷத்தைக் கக்குகிறீர்களா அல்லது விஷயத்தை திசை திருப்புகிறீர்களா...? என்பது உங்கள் கேள்வியாக இருந்தால், பதில், 'இல்லை' என்பதே, நிச்சயம் இல்லை என்பதுதான். 

வினுப்பிரியாவின் படத்தை தவறாகச் சித்தரித்து வெளியிட்டவன் மீதும், இந்த விவகாரத்தை அலட்சியமாகக் கையாண்ட காவல்துறை மீதும் கண்டிப்பாக நடவடிக்கை  வேண்டும். அதில் மாற்று கருத்து இல்லை. ஆனால், அதே நேரம் தொழில்நுட்பம் அனைத்தையும் இலகுவாக்கி, 'போட்டோ ஷாப்' என்னும் ஒரு மென்பொருள் தெரிந்திருந்தால் யார் வேண்டுமானாலும், யாரையும் மோசமாகச் சித்தரித்துவிடலாம் என்கிற போது ஆடைகள், நிர்வாணம் குறித்து நாம் புரிதல் கொள்வதும், அதுகுறித்த புரிதலை நம் குழந்தைகளுக்கு ஏற்படுத்த வேண்டியதும், இன்றியமையாதது ஆகிறது
. 
 
இது ச்ச்ச்சீ விஷயம் அல்ல!
முன்பெல்லாம் பொதுக் கழிப்பறைகளில்  பெண்களை தவறாக சித்திரித்து படங்கள் வரையப்பட்டிருக்கும். வர்ணனைகள் இல்லாமல் பேசவேண்டுமென்றால், இப்போது சமூக ஊடகங்கள்தான் நவீன கழிப்பறைகள்! 

இங்கு  யார் வேண்டுமானாலும், யார் மீது வேண்டுமானாலும் சேற்றை வாரி இறைக்க முடியும். தனது மனக்கழிவுகளை பொதுவெளியில் கக்க முடியும். வக்கிரம் நிறைந்த எந்த ஆண் மனம் சுவற்றில் சாக் பீஸால் பெண்களை கழிவறைகளில் கிறுக்கியதோ, அந்த மனம்தான் இப்போது மவுஸைப் பிடித்து கிறுக்குகிறது. 
அதே வன்மம்தான், ஆனால் இப்போது அது வேறு பரிணாமத்தை எட்டி உள்ளது. ஆனால், இந்த பரிணாமம் முன்பை விட அபாயகரமானதாகவும் இருக்கிறது 

இந்த சூழலில் நாம் நம் குழந்தைகளுடன் இதுகுறித்து வெளிப்படையாக உரையாடுவது அத்தியாவசியம் ஆகிறது
இது ச்ச்ச்சீ விஷயம் அல்ல.

அதேநேரம் இன்னொரு விஷயத்தையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். வினுப்பிரியா தன் படம் தவறாக சித்திரிக்கப்பட்டதால் மட்டும் தற்கொலை செய்திருக்கமாட்டாள். இனி நம்மை இந்த சமூகம்  எப்படி பார்க்குமோ என்ற மனஅழுத்தமும், அவள் அந்த முடிவை எடுக்கக் காரணமாக இருந்திருக்கும். அதனால் நம் சமூகத்தின் அற, ஒழுக்க மதிப்பீடுகளை பரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். 

யாரோ ஒரு கயவன் பெண்கள் படத்தை தவறாக சித்திரிப்பதால், பெண்களுக்கு எந்த அவமானமும் இல்லை. நிச்சயம் உண்மையான அவமானத்திற்குரியவர்கள், அச்செயலை செய்தவர்கள்தான் என்பதை நாம் உணர்ந்து, நம் பிள்ளைகளுக்கும் உணர்த்த வேண்டும்.



முன்பெல்லாம் பள்ளியில் நீதிபோதனை வகுப்புகள் இருக்கும். பணம் மட்டுமே பிரதானம் என போதிக்கப்படும் இச்சுழலில், அது போன்ற வகுப்புகள் இப்போது எந்த பள்ளிகளிலும் நடப்பதாக தெரியவில்லை. நேரடியாக சொல்ல வேண்டுமென்றால், அதன் விளைவுகள்தான் வினுப்பிரியாக்களின் மரணங்களுக்கு காரணங்கள். குறைந்தபட்சம் நாமாவது நம் பிள்ளைகளுக்கு அறம் சார்ந்த கதைகளை கற்பிப்போம். ஒழுக்கம் பெண்களுக்கு மட்டுமானது அல்ல, இருபாலருக்கும் பொதுவானது என்று சொல்லித்தருவோம்.

தொழில்நுட்பத்தை நம் குழந்தைகள் நம்மை விட வேகமாக கற்றுக் கொள்வார்கள். ஆனால், அதை எதற்காகப் பயன்படுத்தவேண்டும் என்று நாம்தான் கற்பிக்கவேண்டும். ஏனெனில், வினுப்பிரியாவும், அவள் படத்தை தவறாகச் சித்தரித்தவனும் வேறு கிரகத்திலிருந்து வந்தவர்கள் அல்ல. அவர்கள் நம் சமூகத்தில் வாழ்பவர்கள். நம்முடன் தினமும் உரையாடிக் கொண்டு இருப்பவர்கள்!

Thanks- Vikatan

Karthikkn

Ads Inside Post