Monday 1 August 2016

பாரம்பரியம் சொல்லும் ஆடிப்பெருக்கு விழா

ஆடிப்பெருக்கு  (Adiperukku)

MONSOON FESTIVALS OF SOUTH INDIA )


ஆடிப்பெருக்கு  என்பது ஆடி மாதம் 18ஆம் நாள் தமிழக ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுவதைக் குறிக்கும்.


ஆடிப்பெருக்கினை பதினெட்டாம் பெருக்கு என்றும், ஆடிப்பதினெட்டு என்றும் அழைக்கின்றனர். பொதுவாக இந்து சமய விழாக்கள் நாட்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு செய்யப்படுவதில்லை. நட்சத்திரங்களை அடிப்படையாக கொண்டும், கிழமைகளையும் கொண்டே நடத்தப்படுகிறது. ஆடி மாதத்தில் 18வது நாள் என்று நாளின் எண்ணிக்கையை கணக்கில் கொண்டு நடத்தப்படும் ஒரே விழா இதுவாகும்.
தென்மேற்கு பருவத்தில் ஆற்றின் நீர்பிடி இடங்களில் பெய்த மழையினால் ஆறுகளில் புதுப்புனல் பொங்கிவரும். இதனையே ஆற்றுப்பெருக்கு எனக்கூறுவர். இதனால் உழவர்கள் இந்நாளில் நம்பிக்கையுடன் பட்டம் பார்த்து விதை விதைப்பர். இப்பொழுது நெல்,கரும்பு முதலியவற்றை விதைத்தால் தான் அவர்கள் தை மாதத்தில் அருவடை செய்ய முடியும். அதற்கு வற்றா நதிகளை தங்கள் கடவுளாக போற்றி மகிழ்ந்து, பூசைகள் செய்து பின் உழவு வேலையை தொடங்குவார்கள். இதனையொட்டியே ஆடிப்பட்டம் தேடிவிதை என்ற பழமொழியும் விளைந்தது
மக்கள் ஆற்றங்கரைகளில் கூடி ஆற்றுப் பெருக்கைக் கண்டு களிப்பர். இந்து சமயத்தவர் கோயில்களில் சென்று வழிபடவும் செய்வர்.

அன்றைய நாள் பெண்கள் ஆற்றில் குளித்து ஆற்றங்கரையில் ஒவ்வொருவரும் பூஜை செய்ய ஒரு இடத்தைப் பிடித்துக் கொள்கின்றனர். அந்த இடத்தை சுத்தம் செய்து, பசு சாணத்தால் மெழுகி அதன் மேல் வாழை இலையை விரித்து, பிள்ளையார் சிலை வைத்து அதன் முன் அகல்விளக்கு ஏற்றி வைக்கின்றனர். வழிபாட்டில் வெற்றிலை, பாக்கு, பழம் படைத்து, பத்தி, கற்பூரம் காட்டி, தடங்கல் இல்லாத விளைச்சலுக்கு விநாயகரை வழிபடுகின்றனர். ஆற்றினை வழிபட்டு வாழை மட்டையில் விளக்குகள் ஏற்றி, அதை ஆற்றில் விடுவார்கள். இப்படி செய்தால், நீர் வளம் பெருகியது போல், அவர்கள் வாழ்க்கையிலும் மகிழ்ச்சியும் செல்வமும் பெருகும் என்ற ஆழ்ந்த நம்பிக்கையில் இச்சடங்குகளை செய்வார்கள்.






ஆடிப்பெருக்கன்று காவிரிக்கரையில் இளம் பெண்களும், புதுமண தம்பதிகள் மற்றும் திருமணமான பெண்கள் புத்தாடை உடுத்திக் கொண்டு பழங்கள், அவல், ஊறவைத்த இனிப்பு கலந்த அரிசி, புதிய மாங்கல்ய மற்றும் மஞ்சள் கயிறு, காதோலை கருகமணி ஆகியவற்றை வைத்து மஞ்சள் மற்றும் மணலால் உருவாக்கப்பட்ட பிள்ளையார் முன் படையல் செய்து வழிபடுவார்கள். சிறுவர்கள் படையலிட்ட மஞ்சள் கயிற்றினை கழுத்து மற்றும் கைகளில் ஒருவருக்கொருவர் உற்சாகத்துடன் கட்டிக் கொள்வார்கள்.

அது மட்டும் அல்லாமல் தங்கள் வீட்டில் பல விதமான கலப்பு சாதங்கள் (தேங்காய் சாதம், சர்க்கரைப் பொங்கல், எலுமிச்சம் பழம் சாதம், தக்காளி சாதம், தயிர் சாதம்) செய்து அதை ஏதாவது ஆற்றங்கறையில் வைத்து குடும்பத்துடனும், நண்பர்களுடனும் சேர்ந்து குதூகலமாக உணவை சாப்பிடுவார்கள்.
காவிரியாற்றின் கரையில் உள்ள ஊர்களில் இவ்விழா மிகவும் புகழ்பெற்றது.
தமிழகத்தின் ஒகனேக்கல் நீர்வீழ்ச்சி முதலாக காவிரி சங்கமிக்கும் பூம்புகார் நகரம் வரை இவ்விழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
·         மேட்டூர் அணை,
·         பவானி கூடுதுறை,
·         ஈரோடு,
·         பரமத்தி-வேலூர்,
·         குளித்தலை,
·         திருச்சி,
·         காவேரிப் பட்டினம் (பூம்புகார்)

நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டத்தில் அடிப்பெருக்கு நாளில் கொல்லிமலை சென்று அங்குள்ள ஆகாயகங்கை நீர்வீழ்ச்சியில் நீராடிஅரப்பளிசுவரரை தொழுவது வழக்கம. ஆடிப்பெருக்கு நாளில் தமிழக அரசு போக்குவரத்து கழகத்தினர் நாமக்கல், சேலம் மற்றும்ராசிபுரத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்குவது வழக்கம்


ஆடி மாதம் 18ம் தேதியை ஆடிப்பெருக்கு என்று தமிழக மக்கள் விமரிசையாக கொண்டாடுகிறார்கள். 18ம் பெருக்கு என்றும் சிலர் குறிப்பிடுவார்கள். பதினெட்டு என்ற எண் வெற்றியைக் குறிக்கும். மகாபாரதத்தில் 18 பர்வங்கள், பகவத்கீதையில் 18 அத்தியாயங்கள், சபரிமலையில் 18 படிகள் முதலானவை எல்லாம் இந்த அடிப்படையிலேயே அமைந்தன.

இந்த முறையிலேயே, நீர் பெருக்கெடுத்து ஓடும் நதிக்கரைகளில் பதினெட்டுப் படிகளை அமைத்த நமது முன்னோர்கள், உள்ளத்துக்கும் உடலுக்கும் ஆரோக்கியத்தை அளிக்கும் அந்தக் காவிரி அன்னைக்கு, ஆடிப் பதினெட்டு அன்று நன்றி செலுத்தும் விதமாக விழா கொண்டாடினார்கள்.

தமிழகத்தில் உள்ள நீர் நிலைகளில் ஆடி மாதத்தில் நீர்வரத்து அதிகரிக்கும். விவசாயம் செய்வதற்கு ஏதுவாக, நதிகளும் நீர் நிரம்பி காணப்படும். பயிர் செழிக்க வளம் அருளும் காவிரித் தாய்க்கு நன்றி தெரிவிக்கும் வகையில்தான் இந்த ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழாவை ஆற்றங்கரை மற்றும் நீர்நிலைகளின் கரைகளில் மக்கள் கொண்டாடி மகிழ்கிறார்கள்.
தமிழ்நாட்டில் கொண்டாடப்பட்டு வரும் விழாக்களில், காவிரிக்கென பிரத்யேகமான விழாவாக ஆடிப்பெருக்கு விழா உள்ளது. தமிழ் மாதமான ஆடி 18ம் நாள் பெருக்கெடுத்து வரும் காவிரித் தாயை மலர்தூவி வரவேற்கும் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. காவிரியாறு தமிழ்நாட்டில் நுழையும் பகுதி ஒகேனக்கல். இங்கு மாநில அரசின் சார்பில் ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கு விழா நடத்தப்பட்டு வருகிறது.

சூரியன் தென்திசை நோக்கிப் பயணப்படுவதை, தட்சிணாயன புண்ணிய காலம் என்று குறிப்பிடுவர். இதில் முதல் மாதமாக ஆடியில் விவசாயிகள் உழவுப்பணி களைத் தொடங்குவார்கள். ஆடிப்பட்டம் தேடி விதை என்று சொல்வதுண்டு. இந்த நாளில் தொடங்கும் செயல்கள் இனிதே நிறைவேறும் என்பது ஐதீகம்.
ஆடி 18ம்தேதி காவிரியில் நீராடி, காவிரி அன்னையை வழிபட்டு மஞ்சள், குங்குமம், மலர், வஸ்திரம் சமர்ப்பிப்பர். புதுமணத் தம்பதிகள் இந்த நாளில் புதுமஞ்சள் கயிறு மாற்றிக் கொள்வது வழக்கம். ஆறு மற்றும் நீர் நிலைகளின் ஓரம் தான் என்று இல்லை, வீட்டிலேயே கூட எளிமையான முறையில் ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாடலாம்.
காவிரி அன்னை, ரங்கநாதரின் தங்கையாக கருதப்படுகிறாள். ஆடிப்பெருக்கு அன்று ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் உள்ள படித்துறைக்கு, ரங்கநாதர் எழுந்தருள்வார். அங்கு அவருக்கு அபிஷேக ஆராதனைகள் முடிந்ததும், புடவை, திருமாங்கல்யம், வெற்றிலை, பாக்கு, பழங்கள் முதலிய சீர் வரிசைகளை யானையின் மேல் ஏற்றி ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து அம்மா மண்டபம் படித் துறைக்குக் கொண்டு வருவார்கள். பெருமாள் முன் அந்தச் சீர்வரிசைகளை வைத்து ஆராதனைகள் செய்த பின் அவற்றை காவிரிக்கு சமர்ப்பிப்பார்கள்.

தென்னிந்தியாவில் திரிவேணி சங்கமம் என்று அழைக்கப்படுகிறது, பவானி கூடுதுறை. இங்குள்ள சங்க மேஸ்வரர் கோவில் ஆடிப்பெருக்கு அன்று அதிகாலையில் திறக்கப்படும். கூடுதுறையில் நீராடிவிட்டு பக்தர்கள், இறைவனை வழிபடுவார்கள். அம்மனுக்கு தேங்காய், பழம், பூ, காதோலை கருகமணி படைத்து ஆராதனை செய்வார்கள். பூஜையில் வைத்த மஞ்சள் சரடினை பெண்கள் கழுத்திலும், ஆண்கள் வலது கை மணிக்கட்டிலும் அணிந்து கொள்வர். இதனால் வீட்டில் மங்கள காரியங்கள் தடையின்றி நடைபெறும் என்பது நம்பிக்கை.

பழங்காலம் போல் தற்போது எல்லா ஆறுகளிலும் பெருக்கெடுத்து ஓடுவது இல்லை என்றாலும், இந்நாளில் காவிரி போன்ற சில ஆறுகளில் மட்டுமாவது அணைகளைத் திறந்து விட்டு நீர் பெருக்கெடுத்து ஓடச் செய்கின்றனர்.
அட்சய திரிதியை தினத்தை விட, ஆடிப்பெருக்கு சிறப்பான நன்னாளாகும். இந்நாளில் நகை மட்டுமின்றி பிற பொருட்களும் வாங்கலாம். ஒருவர் செய்யும் நற்செயல்களால், எவ்வாறு புண்ணியம் பெருகுகிறதோ, அதுபோல் இந்த நாளில் தொடங்கும் எந்தக் காரியமும் நன்மை அளிக்கும் வகையிலேயே நிறைவுபெறும் என்பது நம்பிக்கை.

தானியப்பரவலுக்கு முளைப்பாரி விடுதல்


தானிய பரவலுக்கும், ஆடிப்பட்ட சாகுபடி செழிக்கவும், முன்னோர்கள் கொண்டாடிய, ஆடிப்பெருக்கு விழா, அமராவதி ஆற்றங்கரையோர கிராமங்களில் இன்றளவும் கொண்டாடப்பட்டு, பாரம்பரியம் பாதுகாக்கப்படுகிறது.
ஆடிப்பட்டம்
விவசாய சாகுபடியில், ஆடிப்பட்டம் தேடி விதை என்ற பழமொழி உண்டு. ஆடியில் விதைத்தால், தொடர்ந்து வரும் மாதங்களில் பெய்யும் பருவமழை பயிர்களை வளர செய்யும். தண்ணீருக்கு சிரமம் இல்லை. பாசன வசதியில்லாத நிலங்களில் கூட, மழையை நம்பி ஆடிப்பட்டசாகுபடி செய்வது உண்டு.
ஆடி மாதத்தில் விதைக்கும் விதைகள் பருவமழையால் வளர்ந்து விடும். இதை அடிப்படையாக கொண்டு, அம்மாதத்தில் முளைப்பாரி (நவதானியவிதைகள்)யை நீர் நிலைகளில் மிதக்க விட்டனர்.
நீர் செல்லும் திசைகளில் இந்த விதைகள் சென்று பரவலான தானிய உற்பத்தியை வழங்கியது. இதனால்,மனிதர்களும், கால்நடைகளும், பறவைகளுக்கும் உணவு தட்டுப்பாடு இருக்காது. எனவே, முன்னோர்கள் ஆடி 18ம் தேதியை பண்டிகையாக மாற்றியுள்ளனர்.
முளைப்பாரி சொல்லும் சேதி
ஆடி, 1 ம் தேதி, கிராமங்களிலுள்ள பெண்கள் முளைப்பாரிக்கு விதை, விதைப்பது, நமது பாரம்பரியங்களில் ஒன்றாகும்.
சோளம், கம்பு, நெல், தட்டை பயிறு, பாசி பயிறு, சுண்டல், ஆமணக்கு, துவரை, தினை போன்ற நவதானிய விதைகளை இரவு முழுவதும் தண்ணீருக்குள் ஊற வைத்துவிடுவார்கள்.
பெரியளவு தட்டுக்களை எடுத்து சுத்தம் செய்து, அதில் இரண்டு இன்ச் உயரம் மண்நிரப்பி, அதன் மீது பசு மாட்டு சாணத்தினை, (காயவைத்தது) பொடியாக துாவி, அதன் மேல் மீண்டும் மண் கொட்டுவார்கள்.
அதன் மீது நீரில் ஊற வைத்த நவதானிய விதைகளை துாவுவார்கள். பின்பு, சிறிது மண்துாவி, வீட்டில் சூரிய ஒளி படும் இடத்தில் வைத்து விடுவார்கள். இருநாட்களுக்கு ஒருமுறை, தண்ணீர் ஊற்றினால், விதைகள் மெல்ல மெல்ல முளைக்க தொடங்கும்.
இதே முறையில், 18 நாட்கள் பராமரித்தால், தட்டு நிரம்பி வழியும் அளவுக்கு விதைகள் சிறுசெடிகள் அளவில் பசுமையாக வளர்ந்துவிடும்.
இது தான் முளைப்பாரியாகும். இந்த முளைப்பாரியை சிறு வயது பெண்கள், உற்பத்தி செய்வார்கள். முளைப்பாரியின் வளர்ச்சி, பசுமையை பொறுத்து தங்களின் நடப்பாண்டு வாழ்க்கை அமையும் என்பது கிராம மக்களின் நம்பிக்கைகளில் ஒன்றாகும்.
கிராம பாரம்பரியம்
இவ்வாறு, வீடுதோறும் வளர்க்கப்படும் முளைப்பாரிகள் கிராமங்களிலுள்ள கோவில் வளாகங்களுக்கு எடுத்து வரப்படும்.
மாலை நேரத்தில், புதிய ஆடைகள் அணிந்து, பலவிதமான அலங்காரங்கள், செய்துகொண்டு, சிரிப்பும் குதுாகலமும், மகிழ்ச்சியும் பொங்க, பெண்கள் கூட்டம், கூட்டமாக முளைப்பாரிகளை தலையில் சுமந்து வந்து கோவிலில் சேர்ப்பார்கள்.
இதன் பின்பு, சாமிக்கு பூஜைகள் செய்து வழிபட்டு, கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டிருக்கும் முளைப்பாரிகளை சுற்றிவந்து 'கும்மியடித்து' கிராமத்து பாடல்களை பாடுவார்கள். இந்நிகழ்ச்சிக்கு பின் தொடங்கும், முளைப்பாரி ஊர்வலம், கேலி, கிண்டல், சாடை பேச்சுக்களுடன் ஆற்றங்கரைக்கு வந்து சேரும்.
இரவு தொடங்கிய நேரத்தில், ஒவ்வொரு பெண்ணாக நீரில் நின்று தாங்கள் எடுத்து வந்த முளைப்பாரியை ஆற்றில் மிதக்க விடுவார்கள். மிதந்து செல்லும், முளைப்பாரி (நவதானியவிதைகள்) நீரின் போக்கில் சென்று பல இடங்களில் தங்களை மண்ணில் புதைத்துக்கொண்டு தானியகதிர்களாக உருவெடுக்கும்.
கிராமங்கள்தோறும், இதுபோல்ஆற்றில், முளைப்பாரிகள் மிதக்க விடுவதால், ஆற்றின் கரைகள் முழுவதும் தானிய உற்பத்தி பெருகியது. நவதானிய விதைகளும் பல இடங்களுக்கு பரவியது.
மடத்துக்குளம் பகுதியிலுள்ள அமராவதி ஆற்றங்கரையோர கிராமங்களில், ஆடிமாதம் 18 ம்தேதி முளைப்பாரி ஊர்வலம் தற்போதும் நடந்து வருகிறது. இது ஒரு நிகழ்ச்சியாக நடத்தப்பட்டாலும், தானியபரவலாக்கமும், உணவு உற்பத்தியும் இதன் முக்கிய நோக்கமாக இருந்துள்ளது.
தங்கள் கிராமங்களுக்கு தொடர்பில்லாத, பல நுாறு மைல் தொலைவில் வசிக்கும் மனிதர்களுக்கும், விதைகள் சென்றடைந்தன. இது, முன்னோர்களின் தெளிந்த அறிவுக்கு சான்றாகும். பல நுாற்றாண்டுகளுக்கு முன்பு தொடங்கிய இந்த பாரம்பரியம் ஆடி 18ம் தேதி சிறப்புக்களில் ஒன்றாகும்.

KARTHIKKN












































































































































































































































No comments:

Post a Comment

Ads Inside Post